சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
சாயல்குடி : சாயல்குடி போஸ்ட் ஆபீசில் கடந்த இரண்டு மாதங்களாக அஞ்சல் அலுவலர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ளதால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாண வர்கள் உள்ளிட்டோர் சிரமமடைந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குழந்தைகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு பணிகளை செய்ய அலுவலக வேலை நாட்களில் நாள்தோறும் சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் வருகின்றனர். இந்நிலையில் அஞ்சல் அலுவலர் கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் அதற்குரிய பணியிடத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது. சாயல்குடியைச் சேர்ந்த கே.பாஸ்கரன் கூறிய தாவது: சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக விரைவு தபால் அனுப்புவதில் கடும் தாமதம் ஏற்படுகிறது. விரைவு தபாலுக்கான பிரின்ட் செய்யும் பிரின்டர்கள் முறையாக செயல்படாததால் காலதாமதம் ஏற்படுகிறது. இரண்டு மாதங்களாக அஞ்சல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் தினசரி கூலித் தொழிலாளர்கள் சிரமப்பட்டு தங்கள் வேலை நேரத்தையும், பயண செலவுடன் கடலாடி அல்லது பெருநாழி போஸ்ட் ஆபீஸ் சென்று ஆதார் சேவைகளை பெற சென்று வருகின்றனர். எனவே போஸ்ட் ஆபீசில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.