| ADDED : பிப் 10, 2024 11:51 PM
திருவாடானை: இளம் வாக்காளர்களை சேர்க்க ஓட்டுச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தபட்டது.லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இளம் வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்க செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுஉள்ளது. இளம் வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஆர்வம்காட்டி வருகிறது.இது குறித்து தேர்தல்அலுவலர்கள் கூறியதாவது:நேற்று அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த கலெக்டர்விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார். அதன்படி திருவாடானை சட்டசபை தொகுதியில் உள்ள 247 ஓட்டுச்சாவடிகளில் முகாம்கள் நடந்தது.தேர்தலில் வாக்களிக்க தகுதியான 18 வயது பூர்த்தியானவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டாலும் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் செய்யும் பணியும் தற்போது நடந்து வருகிறது.விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இளம் வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ள திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று உடனடியாக விண்ணப்பித்து வரும் தேர்தலில் தங்களின் வாக்கை செலுத்தி, ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றனர்.