இலங்கை போலீஸ்காரர் கைதான வழக்கு; மூன்று சாட்சிகளிடம் விசாரணை
ராமநாதபுரம்:போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இலங்கை கொழும்பு புறநகரான சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020- ஆக.,26-ல் போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுர குமார என்பவரையும் பிடித்தனர். இவர் இலங்கை துறைமுகம் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார். அவர்தான் போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்து வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தனர். இதையறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 ல் செப்., 4 ல் மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்குசி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா நேரில் ஆஜரானார். மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் , இந்த வழக்கை விசாரித்த அப்போதைய கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ, அப்போதைய மண்டபம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அப்போதைய ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோரின் சாட்சியங்களை பதிவு செய்தார். பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. வழக்கை நீதிபதி ஆக.,2க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.