உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை போலீஸ்காரர் வழக்கு டிச.10 க்கு ஒத்திவைப்பு

இலங்கை போலீஸ்காரர் வழக்கு டிச.10 க்கு ஒத்திவைப்பு

ராமநாதபுரம் : -போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி கள்ளப்படகில் தமிழகம் வந்த போது தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணை டிச.,10 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020- ஆக.,26-ல்இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் அனுர குமார என்பவர் கைது செய்யப்பட்டார்.இவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன். பிரதீப் குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி சகோதரர் அனுர குமாரவிடம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்.,4 ல் மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப்அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார்.வழக்கை டிச.,10க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை