தமிழக மீனவர் விசைப்படகுகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன் வளர்ப்பு நிறைந்த இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி, 2017 முதல் 2024 வரை தமிழக மீனவர்களின் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், மன்னார், பருத்தித்துறை கடற்கரையில் நிறுத்தி உள்ளனர்.இதில், 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ரோந்து பணிக்கு நல்ல நிலையில் உள்ள தமிழக படகுகளை வழங்க வேண்டும் என இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்துறையினரிடம் வலியுறுத்தினர்.இதையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர், மயிலாட்டி மற்றும் மன்னார் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட, நல்ல நிலையில் உள்ள 13 விசைப்படகுகளை, கடற்படைக்கு வழங்குவதற்கு இலங்கை மீன்துறை அனுமதித்தது. இதை இந்திய அரசு தடுத்து படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்காவிட்டால், இனிவரும் நாட்களில் இப்படகுகளை பயன்படுத்தி தமிழக மீனவர்களை இலங்கை வீரர்கள் சிறைபிடிக்கும் சம்பவம் நடக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.