தொடரும் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
சாயல்குடி: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் காலை, மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை ரோடு பகுதி, ராமநாதபுரம் ரோடு மற்றும் துாத்துக்குடி செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் ரோட்டோரங்களில் அதிகளவு வாகனங்கள், டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவு உள்ளதால் ரோட்டில் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு காலை, மாலை நேரங்களில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.தன்னார்வலர்கள் கூறியதாவது:சாயல்குடி நகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது.துாத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பிரதான ரோட்டோரங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லா நேரங்களிலும் சரக்குகளை இறக்குகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே சாயல்குடி போலீசார், கடலாடி வருவாய்த்துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் சாலையோரங்களில் இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.