காரில் தப்பிய கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க திணறும் போலீசார்
ராமேஸ்வரம்: இலங்கைக்கு காலணி பொருள்கள் கடத்திய வழக்கில், போலீசாரின் தடுப்பு வேலியை உடைத்து காரில் தப்பிய கடத்தல்காரரை, இருநாள்கள் ஆகியும் போலீசார் கைது செய்யவில்லை.பிப்., 14 இரவு ராமேஸ்வரம் அருகே மண்டபம் சீனியப்பா தர்கா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள காலணி தயாரிப்புக்கான மூலப் பொருள்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் தப்பினர். இதில் ஒரு கடத்தல்காரர் காரில் தப்பிய போது, ராமநாதபுரம் அருகே உச்சிப்புளிபிரப்பன்வலசை சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்தனர். ஆனால் காரில் அசுர வேகத்தில் சென்ற கடத்தல்காரர் அச்சமின்றி, தடுப்பு வேலி மீது மோதி துாக்கி வீசிவிட்டு தப்பி சென்றார். இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இருநாட்கள் ஆகியும் தப்பிய கடத்தல்காரரை போலீசார் கைது செய்யவில்லை. தப்பிய கடத்தல்காரருக்கு முக்கிய பிரமுகருடன் தொடர்பு இருக்கலாம் எனவும் தகவல் பரவுகிறது.