உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் ஜன.,12ல் நடக்கிறது
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி ஜன.,12 காலை 8:30 மணிக்கு நடக்கிறது.இக்கோயிலில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது. புராண, இதிகாசத்துடன் தொடர்புடைய உத்தரகோசமங்கை கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமான உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் படி களைதல் மற்றும் புதிய சந்தனம் காப்பிடப்படும் தரிசனத்திற்காக பல லட்சம் பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு வருகின்றனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு கோயில் முன்புறமுள்ள மங்கள விநாயகர் கோயிலில் இருந்து அனுக்ஞை பூஜையுடன் இந்த விழா துவங்கியது. கோயிலில் வடக்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ள பச்சை மரகத நடராஜர் சிலை உலகப்புகழ்பெற்றது. ஜன.,12 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தன காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது.அதன் பின் நாள் முழுவதும் மூலவர் மரகத நடராஜர் திருமேனியில் 32 வகை அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது.இரவு 11:30 மணிக்கு மேல் திரை மூடப்பட்டு புதிய சந்தனக் காப்பு மற்றும் அலங்கார மாலைகள் சூடப்படுகிறது. மறுநாள் ஜன., 13 அதிகாலை 2:00 மணிக்கு பிறகு அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாசகர் பெருமானுக்கு, காட்சி கொடுத்து சோடச உபசார அலங்கார தீபாராதனை நடக்க உள்ளது.ஆண்டிற்கு ஒருமுறை சந்தனம் படி களையப்பட்ட மூலவர் மரகத நடராஜரின் திருமேனியை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.