கபடியில் திருவாடானை மாணவர்கள் முதலிடம்
திருவாடானை: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டியில் திருவாடானை கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட அளவிலான கபடி போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.மாவட்டத்தில் உள்ள 21 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரி 12 பேர் கொண்ட குழுவினர் போட்டியில் பங்கேற்று முதலிடத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் பழனியப்பன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் இவர்கள் கலந்து கொள்கின்றனர்.