ரூ.65.60 லட்சம் கஞ்சா பறிமுதல் இலங்கை நபர்கள் மூவர் கைது
ராமேஸ்வரம்:இலங்கை நெடுந்தீவு அருகே சந்தேகத்திற்கிடமான இலங்கை படகை, அந்நாட்டு கடற்படையினர் சோதனையிட்டனர். அதில், 328 கிலோ கஞ்சா பார்சல்கள் இருந்தன. அதை கடத்தி வந்த இலங்கை மன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கஞ்சாவின் மதிப்பு 65.60 லட்சம் ரூபாய். இதை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து கடத்தி வந்து, கைதானவர்களிடம் ஒப்படைத்த தமிழக கடத்தல்காரர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அதுபோல, தனுஷ்கோடி, மணல் தீடையில் ஒதுங்கிய 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை, இந்திய கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி சென்றபோது, இந்திய பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும், பீடி இலைகளை கடலில் வீசி கடத்தல்காரர்கள் தப்பி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.