அரண்மனை ரோட்டில் அளவில்லாத ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் அரண்மனை ரோட்டில் கோட்டை விநாயகர் கோயில் அருகே நாளுக்கு நாள் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் மெயின் பஜார் எனப்படும் அரண்மனை பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி, பலசரக்கு என ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் வாகன போக்குவரத்து தினமும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ரோட்டின் இருபுறங்களிலும் கண்டபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். சில கடைக்காரர்கள் ரோடு வரை கூரை அமைத்துள்ளனர். குறிப்பாக கோட்டை விநாயகர் கோயில் அருகே ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.இதனால் அரண்மனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுவது வாடிக்கையாகியுள்ளது.எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.