கலெக்டர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி சாய்ந்த மரங்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதிய பராமரிப்பின்றி பட்டுப்போன மரங்கள் பலத்த காற்று மழையின் போது கீழே சாய்ந்து அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றவும், புதிதாக மரக்கன்றுகள் வைக்கவும் வேண்டும்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் வனத்துறை சார்பில் சவுக்கு, நாவல், புங்கன், புளி என நுாற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இவை போதிய தண்ணீர், பராமரிப்பு இல்லாததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பட்டுப்போய் காய்ந்தும், பலத்த காற்று, மழையின் போது வேருடன் சாய்ந்து மரங்கள் கீழே விழுகின்றன.பல மாதங்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. சில நாட்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வரத்து கால்வாய் மண் அரிப்பால் அங்கிருந்த மரம் வேருடன் சாய்ந்து காம்பவுண்ட் சுவற்றில் விழுந்தது.எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில்விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி முறைப்படி ஏலம் விட வேண்டும். அவற்றிற்குப் பதில் கூடுதலாக மரக்கன்றுகள் நடுவதற்கு வருவாய்த்துறை, வனத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.