வலையில் சிக்கிய ஆமைகடலில் விடப்பட்டது
தொண்டி: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்த போது 15 கிலோ அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு மீனவர்கள் தெரிவித்தனர். போலீசார் கூறியபடி பாதுகாப்புடன் ஆமையை மீட்டு உயிருடன் கடலில் விட்டனர்.மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஆமையை பிடிக்கக் கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம் என்றனர்.