எமனேஸ்வரத்தில் திறக்கப்படாமல் காட்சிப்பொருளான எரிவாயு தகன மேடை
பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு தகன மேடை எமனேஸ்வரம் ஜீவா நகரில் கட்டி திறக்கப்படாமல் உள்ளது. பரமக்குடியில் காக்காதோப்பு, மஞ்சள்பட்டணம், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மயானம் செயல்படுகிறது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் பட்டணம் பகுதியில் எரிவாயு தகன மேடை நகராட்சியால் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்போது 2023-- 24ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஜீவா நகர் 9வது வார்டில் திரவ பெட்ரோலிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராமநாத புரம் வருகை தந்த முதல்வர் இதனை காணொளி மூலம் திறந்து வைத்தார். மதுரையைச் சேர்ந்த முத்தையா அறக்கட்டளை நிறுவனத்தினர் மஞ்சள் பட்டணம் தகன மேடையை பராமரிக் கின்றனர். இதேபோல் ஜீவா நகர் தகனம் அமைக்கும் பணி நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டது. இப்பணியை முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது மயானத்தைச் சுற்றி வீடுகள் அதிக அளவில் உள்ளதால் விறகு மூலம் எரியூட்டும் போது சுகாதாரக் கேடான சூழல் அதிகரித்துள்ளது. மஞ்சள் பட்டணத்தில் அவ்வப்போது விறகு மூலம் எரியூட்டுவதும் தொடர்கிறது. இதேபோல் பரமக்குடியில் உள்ள காக்கா தோப்பு மயானத்திற்கு ஏராளமான உடல்கள் விறகு மூலம் எரியூட்டும் நிலையில், இப்பகுதியிலும் எரிவாயு தகனமடை அமைக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தி னர்.