பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி லீலை ; ராப்பத்து விழா நாளை நிறைவு
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி லீலை கோலாகலமாக நடந்த நிலையில் நாளை ராப்பத்து விழா நிறைவடைகிறது.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் டிச., 31 ல் திரு அத்யயன உற்ஸவம் எனப்படும் பகல் 10 துவங்கியது. ஜன. 10 வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அன்று துவங்கி ராப்பத்து விழா நடக்கும் நிலையில் நாளை நிறைவடைகிறது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார். அப்போது திருமங்கை மன்னன் கோயிலை கட்ட செல்வந்தர்களிடம் பெரும் பொருளை திருடும் செயலில் இருந்தார்.பெருமாள் மற்றும் தாயாரை வழிமறித்து பொன், பொருளை கேட்டார். அங்கு பெருமாளின் காலில் இருந்த மெட்டியை கழற்ற முடியாத நிலையில் மன்னனின் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற திருமந்திரத்தை கூறி மெட்டியை எடுத்துக் கொள்ள பெருமாள் தெரிவித்தார். இந்த லீலை கோலாகலமாக நடந்தது. திருமங்கை ஆழ்வார் 108 திவ்ய தேசங்களில் 82 கோயில்களில் மங்களாசாசனம் பாடி உள்ளார். அதிகமான பாசுரங்களை பாடியவரும் இவரே ஆவார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.