அஞ்சலக செயலியில் பணம் செலுத்தலாம்
ராமநாதபுரம்: அஞ்சலக செயலி மூலம் ஆயுள் காப்பீடு, யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமன்ட்டில் வங்கியில் 12 கோடிக்கும் அதிகமானோர் சேமிப்பு கணக்குகள் உள்ளன. மாணவர்கள், விவசாயிகள், கர்ப்பிணிகள், முதியோர்களுக்கான உதவித் தொகை, 100 நாள் வேலை கணக்குகளும் அடங்கும். ஆரம்ப காலத்தில் துவங்கப்பட்ட கணக்குகளுக்கு வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்கில் உள்ள தொகையை எளிதாக வாரிசுதாரர்கள் பெற முடியும். இதற்கான வசதி அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் உள்ளது. அதுமட்டுமின்றி ஐ.பி.பி.பி., (IPPB) எனும் செயலி மூலம் வாரிசு நியமனம், மாற்றம் செய்து கொள்ளலாம். செயலியில் ஆதார் இணைப்பு செய்து அரசின் நேரடி மானியங்களை எளிதாக பெறமுடியும். அஞ்சலக சேமிப்பு கணக்கு இணைப்பதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியும். செல்வமகள், தங்க மகள், ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு செயலி வாயிலாக பணம் செலுத்த முடியும். பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் தனிநபர் விபத்து காப்பீடு, வாகன காப்பீடு எடுக்க முடியும். வியாபாரிகளுக்கு யு.பி.ஐ., ஸ்கேன் மூலம் பணம் பெறும் வசதி இலவசமாக ஏற்படுத்தி தரப்படும் என்றார்.