ஆட்டோ டிரைவர் கொலை கிணற்றில் மீட்கப்பட்டது உடல்
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே கை, கால்களை கட்டி, கொலை செய்து, ஆட்டோ டிரைவர் சடலத்தை கிணற்றில் வீசி சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் துரைசாமி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் திலீப்குமார், 33. இவரை கடந்த, 1ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர், பல இடங்களில் இவரை தேடி வந்தனர். அரக் கோணம் டவுன் போலீசிலும் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில், அரக்கோணம் அடுத்த ஓச்சலம் பகுதியில் பாழடைந்த கிணற்றில், ஆண் சடலம் கிடப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, கை, கால்கள் கட்டி, கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது தெரிந்தது. கொலை செய்யப்பட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன ஆட்டோ டிரைவர் திலிப்குமார் என்பது தெரிந்தது. அவரை யார் கொலை செய்தனர் என்பது குறித்து, அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.