பட்டாசு குடோனில் வெடி விபத்து சிவகாசி நபர் உடல் கருகி பலி
காரிப்பட்டி:சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பருத்திக்காட்டை சேர்ந்தவர் ஜெயகுமார், 50. அருகே உள்ள வெள்ளியம்பட்டி காட்டுவளவில் பட்டாசு குடோன் நடத்துகிறார். நேற்று காலை, 9:30 மணிக்கு, வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. அங்கு பணியில் இருந்த, சிவகாசியை சேர்ந்த ஜெயராமன், 55, சம்பவ இடத்தில் கருகி உயிரிழந்தார். தவிர கார்த்தி, முத்துராஜா படுகாயம் அடைந்தனர்.சேலம் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் வந்து, தீயை முற்றிலும் அணைத்தனர். வீராணம், காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.காரிப்பட்டி போலீசார் கூறுகையில், 'உரிய அனுமதி பெற்று, 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஜெயக்குமார் என்பவர், தகர ஷீட்டில் வீடு போல அமைத்து குடோன் நடத்தினார். அங்கு இறக்கி வைக்க, சிவகாசியில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசு தயாரிக்கும் மருந்து வந்தது.'அந்த மூட்டைகளை பணியாளர்கள் இறக்கியபோது, மருந்து கொட்டியதில், வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.விபத்தில் இறந்த ஜெயராமன் குடும்பத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.