மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீட்டில் 27 பவுன், 1.5 கிலோ வெள்ளி திருட்டு
சேலம்,மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீட்டில், 27 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.சேலம் மாவட்டம் சீரகாபாடி, மதுரையன் காட்டை சேர்ந்தவர் முருகேசன், 52. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.இவரது மனைவி பூமலர். இவர்களது மகள், கோவையில் சர்வேயராக பணிபுரிகிறார். மற்றொரு மகள் புதுச்சேரியில், எம்.பி.பி.எஸ்., படிக்கிறார்.திண்டிவனத்தில் முருகேசன், மனைவியுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். 15 நாட்களுக்கு முன், பூமலர், சீரகாபாடி வந்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள மகளை பார்க்க சென்றார். நேற்று மாலை, 4:30 மணிக்கு மீண்டும் சீரகாபாடி வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்த பூமலர், உள்ளே சென்று பார்த்த போது மர பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த, 27.5 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.பூமலர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக, தெற்கு துணை கமிஷனர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா விசாரித்தார்.