போலி பத்திரப்பதிவு கண்டறிந்தால் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை
ஓமலுார்: ''போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலுாரில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில், வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அலுவலகத்துக்கு முதியோர் சிரமமின்றி வருவதற்கு சாய்தள வசதி, மக்கள் அமரும் பகுதியில் மின்விசிறி அமைக்கவும் உத்தரவிட்டார்.அப்போது அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, 'இந்த வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை பராமரித்தால் மக்கள் அமர வசதியாக இருக்கும்' என கூறி, அமைச்சரை அழைத்து சென்று காட்டினார். அதற்கு பத்திரப்பதிவு துறைத்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், 'விரைவில் பணி மேற்கொண்டு, மக்கள் பயன்பாடுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''ஓமலுார் சார் - பதிவாளர் அலுவலகம் குறித்து பல தகவல் வந்ததால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காடையாம்பட்டி தாலுகா மக்கள் தொகைக்கேற்ப ஆய்வு செய்து சார் - பதிவாளர் அலுவலகம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.அதேபோல் தாரமங்கலம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.