சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தன மரக்கட்டை கடத்த முயற்சி
சேலம்:சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தன மரக்கட்டை கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் ரயில்வே ஸ்டேஷன், 5வது நடை மேடையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அதன் பின் பகுதியில் சில சந்தன மரங்கள் உள்ளன. அந்த மரங்களை, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் வெட்டியுள்ளது. ஒரு மரத்தை முழுதும் வெட்டி, சற்று தொலைவில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு கொண்டு சென்ற கும்பல், அங்கு வைத்து துண்டு, துண்டுகளாக வெட்டியுள்ளனர். பின், அதன் மேற்பகுதியை மட்டும் சீவி கடத்திச்சென்றனர். அது, 100 கிலோவுக்கு மேல் இருக்கலாம்.இதுகுறித்து நேற்று காலை தகவல் கிடைத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த, 100 கிலோவுக்கு மேற்பட்ட சந்தன மரக்கட்டைகளை மீட்டனர். மேலும் இரு மரங்களை வெட்டி கடத்த முயன்ற நிலையில், அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.