ஜாதி வசனத்துடன் வைத்த பேனர்கள் அகற்றம்
வாழப்பாடி, வாழப்பாடி, பேளூர் அருகே திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. அதற்கு அனுமதியின்றி, நெடுஞ்சாலையோரங்களில் பல பேனர்களை, பல்வேறு வசனங்களுடன், போட்டி போட்டு வைத்திருந்தனர். இதனால் வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், நேற்று காலையே, அனைத்து பேனர்களையும் அகற்றினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அனுமதியின்றி ஜாதி ரீதியாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, வசனங்களுடன் பேனர்களை வைத்திருந்தனர். இதனால் அனைத்து பேனர்களும் அகற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின் பேனர் வைத்தவர்களே அகற்றிக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.