ரூ.1 கோடி சொத்து குவிப்பு அரசு அலுவலர் மீது வழக்கு
சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூர், நவப்பட்டியை சேர்ந்தவர் பூபாலன், 36. இவர், 2014 மார்ச்சில், மாவட்ட வேளாண் துறையில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து ஈரோடு தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலக உதவியாளராக, 2019 பிப்ரவரி முதல் பணியில் உள்ளார்.இவரது தந்தை சென்னகிருஷ்ணன், அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். அப்போது, சேலம் மண்டல அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலர் பதவி வகித்தார்.இந்நிலையில் பூபாலன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, சமீபத்தில் புகார் சென்றது. இதனால், 2017 ஜூன் முதல், 2022 ஜூன் வரையான, சொத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'பூபாலன், வருமானத்துக்கு அதிகமாக, 1.09 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். இது, 1,188 சதவீதம். இதுதொடர்பாக கடந்த, 25ல் பூபாலன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.