கூடுதல் மகசூலுக்கு பொட்டாஷ் பாக்டீரியா; மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், 19,700 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் மட்டும், 410 ஹெக்டேரில் நெல் நடவு செய்துள்ளனர்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறியதாவது:பயிர் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் நுண்ணுட்ட சத்து பயன்படுத்த வேண்டும். பயிர் வளர்ச்சிக்கு சாம்பல் சத்து முதன்மையானது. மண்ணில் சாம்பல் சத்து அதிகம் இருப்பினும், 2 சதவீதம் மட்டும் பயிர்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது. பொட்டாஷ் பாக்டீரியா மண்ணில் கரையாத நிலையில் உள்ள சாம்பல் சத்தை, நீரில் கரையும் சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. சரியான ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதோடு, பயிர்களின் மகசூலை, 15 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிகரிக்கும். இந்த திரவ உயிர் உரத்தை, 50 மி.லி., பயன்படுத்தி, ஒரு ஏக்கருக்கு தேவையான விதை நேர்த்தி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, 200 மி.லி., தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயல்களில் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 150 மி.லி., நீரில் கலந்து, நாற்றுகளின் வேர் நனையும்படி, 30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம்.ஒரு லிட்டர் நீருக்கு, 1 மி.லி., வீதம் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து, 15, 30, 45 நாட்களில் உபயோகிக்கலாம். திரவ உயிர் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் நுண்ணுட்டத்தை, மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். விபரம் பெற, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.