வருவாய் அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம்
மேட்டூர், அக். 20-மேட்டூர் நகராட்சி, 29வது வார்டு ஹவுசிங் யுனிட், முல்லை நகர், ஜீவா நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், 1986ல் வீட்டுமனைகளாக பிரித்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அப்பகுதியில், 80 அடி அகல சாலை இருந்தது. அதன் இருபுறமும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற மேட்டூர் சப்- கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.அதற்கான நடவடிக்கை எடுக்காமல் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து, மேட்டூர், சின்னபார்க் அருகே அம்பேத்கர் மக்கள் மையம் சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவர் அசோக்குமார், நிறுவன தலைவர் சசிகுமார், அங்கு வசிக்கும் பலர் பங்கேற்றனர்.