மேலும் செய்திகள்
மீன் வளர்ப்புக்கு மானியம்
03-Apr-2025
சேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை செயல்படுத்தும் மீன்வள மேம்பாடு திட்டத்தில், 'தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்' திட்டம், 2024 - 29 வரை, 5 ஆண்டுக்கு செயல்படுத்த உள்ளது. இதில் மலைவாழ் மீனவ மக்கள், பழங்குடியினர், மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் வாழ்வாதாரம் உயர்த்த, மீன் பண்ணை குட்டைகள் வெட்டுதல், மீன்வளர்ப்பு குளம் அமைத்தல், மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைத்தல் மூலம், மீன்பண்ணை குட்டைகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல், மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு மானியம் உண்டு.அலங்கார மீன் வளர்த்தல், கொல்லைப்புற, நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல், நீரை மறுசுழற்சி செய்து மீன் வளர்த்தல், ஏரிகளில் கூண்டு வைத்து மீன் வளர்த்தல், குளிர் சேமிப்பு ஆலை, பனிக்கட்டி ஆலை அமைத்தல், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய, 3 சக்கர வாகனம், நேரடி மீன் விற்பனை மையம், சிறிய மீன் தீவிர ஆலை, மீன் விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு, 90 சதவீத மானியம் உண்டு.இத்திட்டம் பாலமலை, கத்திரிப்பட்டி, ஜருகுமலை, தும்பல்பட்டி, செம்மநத்தம், ஆனக்காடு, வெள்ளூர், புலியூர், வாழவந்தி, மாரமங்கலம் பீலக்காடு, கிளையூர், செந்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படுவதால், மீனவ சமுதாய மக்கள், பழங்குடியினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெற, 'உதவி இயக்குனர், மீனவர் நலத்துறை, மேட்டூர் அணை' எனும் அலுவலகத்தை அணுகலாம். விபரம் பெற, 96773-50979, 89400-00482 என்ற எண்களில் அழைக்கலாம்.
03-Apr-2025