துன்புறுத்தப்படும் இந்து மக்கள்: பா.ஜ., குற்றச்சாட்டு
சேலம்:''தி.மு.க., ஆட்சியில், இந்து மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.இதுகுறித்து அவரது அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது. அப்போது அருகே உள்ள சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்த விரும்பிய மக்கள், போலீஸ், வருவாய்த்துறையிடம் அனுமதி கோரி மனு செய்தனர். அங்கு கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாடி வருவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மக்கள் சார்பில், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அதில், 'அரசு மைதானத்தை அனைத்து மதத்தினரும் பயன்படுத்தலாம். ஈஸ்டர் காலத்தில் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக பிற மதத்தினர் பயன்படுத்தக்கூடாது என தடுக்க இயலாது' எனக்கூறி, அன்னதானம் நடத்திக்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார். இது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், இந்து மக்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதற்கு உதாரணம். மதச்சார்பற்ற அரசு என சுய விளம்பரம் செய்துகொள்ளும், முதல்வர் ஸ்டாலின், அனைத்து மக்கள் பண்டிகைகளையும் சமமாக மதிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.