வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை உலகிலே...
சேலம், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவமனை மனநலத்துறை சார்பில் நேற்று, விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். அதில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகிலே...' உள்ளிட்ட தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய தட்டிகளை ஏந்தி, டீன் அலுவலகத்தில் இருந்து, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்கள் வழியே சென்று, மீண்டும் மருத்துவமனையை அடைந்தனர்.ஏற்பாடுகளை மனநல மருத்துவத்துறை தலைவர் ரவிசங்கர் உள்ளிட்ட மருத்துவர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.இதுகுறித்து, மனநல மருத்துவர்கள் கூறியதாவது:தனிமையை அதிகம் விரும்புவது, தற்கொலை குறித்து பேசுதல், எழுதுதல் உள்ளிட்ட சில அறிகுறிகளை வைத்து தற்கொலை எண்ணத்தை கண்டறிய முடியும். அவர்களை தடுக்க, வெளியே எங்காவது அழைத்துச்செல்ல வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, இசையை கேட்க வைப்பது போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். மனம் விட்டு பேசுவதால் தற்கொலை எண்ணத்தை மாற்றி வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.