கோவில் கட்ட தனி நபர் எதிர்ப்பு இந்திரா நகர் மக்கள் சாலை மறியல்
ஆத்துார்: புதிதாக கோவில் கட்ட தனி நபர் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து, பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வளையமாதேவி ஊராட்சி இந்திரா நகரில், ஒரு தரப்பினராக, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஒரு மாதத்துக்கு முன், அதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில், 3 அடி உயரத்தில் கான்கிரீட் கட்டடம் கட்டி, அதன் மீது, 3 கற்களை சுவாமியாகவும், சூலாயுதமும் வைத்து சுவாமி கும்பிட்டு வருகின்றனர். இக்கோவில் கட்டடம் அருகே தினேஷ்குமார் என்பவருக்கு இடம் உள்ளது.அவரது இடத்துக்கு கோவில் இடையூறாக உள்ளதாக கத்திய அவர், நேற்று காலை, 9:30 மணிக்கு சூலாயுதத்தை பிடுங்கி வீசியபோது, பூசாரி கோட்டையன் தடுக்க முயன்றார். அவரை தள்ளிவிட்டுள்ளார். இதையறிந்த மக்கள், 10:40 மணிக்கு அந்த வழியே வந்த, அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் பேச்சு நடத்தி, விசாரித்து தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.