பஸ் கதவை மூட விடாமல் ரகளை மாணவர்கள் மீது மேலாளர் புகார்
ஆத்துார், ஆத்துார் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் நலன் கருதி, டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் ஆத்துாரில் இருந்து தலைவாசல் நோக்கி சென்ற, தடம் எண்: 24 பஸ்சில், அந்த கல்லுாரி மாணவ, மாணவியர் ஏறினர். மாணவர்கள், பஸ் படியில் தொங்கியபடி பயணித்தனர். கதவு தாழிட்டுக்கொள்ளும் வசதி உள்ள பஸ் என்பதால், மாணவர்களை உள்ளே வரும்படி, டிரைவர், கண்டக்டர் அறிவுறுத்தினர்.ஆனால் படியில் நின்றபடியே பயணித்ததால், காந்திபுரம் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்திய டிரைவர், மாணவர்களை உள்ளே வரும்படி கூறினார். அப்போது மாணவர்கள் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டனர். மற்ற பயணியர், மாணவர்களை சமாதானப்படுத்திய பின், பஸ் புறப்பட்டது.இதுதொடர்பாக, ஆத்துார் கிளை மேலாளர் வெங்கடேசன் நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் புகார் அளித்தார். அப்போது போக்குவரத்து போலீசார் மூலம் பஸ் படியில் மாணவர்கள், மக்கள் பயணிக்காதபடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என, டி.எஸ்.பி., உறுதி அளித்தார்.