தொழில் வரிக்கு கவனிப்பு பெற்ற விவகாரம்: கலெக்டரிடம் முறையீடு
சேலம்: தொழில் வரி செலுத்த சென்றவரிடம், 3,000 ரூபாய் பெற்று, 1,000 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கிய, ஏகாம்பரம் ஊராட்சி கணினி ஆப்பரேட்டர் மீது, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த ஏகாம்பரத்தை சேர்ந்தவர் கார்த்தி, 26; ஈரோடு தனியார் கல்லுாரியில் பி.எல்., மூன்றாம் ஆண்டு படிக்கும் இவர், விடுமுறை நாட்களில் தந்தையின் விசைத்தறி கூடத்தில் வேலை செய்கிறார். இவர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய புகார் மனு: எங்கள் விசைத்தறி கூடத்துக்கு தொழில்வரி செலுத்த, ஜூனில், ஏகாம்பரம் ஊராட்சி எழுத்தர் சரவணன், கணினி ஆப்பரேட்டர் கோகுலபிரியா ஆகியோரை அணுகினேன். கோகுலபிரியா, '10,000 ரூபாய் செலுத்தினால் தொழில்வரி ரசீது கிடைக்கும்' என்றார். ஜூலை 2ல், தொடர்பு கொண்டு, '3,000 ரூபாயை எனக்கு கூகுள் பே அனுப்புங்கள். உங்களுக்கு உடனடியாக வாட்ஸாப்பில் ரசீது அனுப்பி வைக்கிறேன்' என்றார். அதன்படி, 3,000 ரூபாய் அனுப்பி வைத்தேன். ஆனால், எனக்கு அனுப்பிய ரசீதில், 1,000 ரூபாய் மட்டும் என, குறிப்பிடப் பட்டிருந்தது. அவரிடம் கேட்ட போது, பி.டி.ஒ., துணை பி.டி.ஒ., ஊராட்சி செயலரை 'கவனிக்க' வேண்டும் எனக்கூறி, மிரட்டலாக பேசினார். இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினேன். விசாரணை நடத்தி, ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாநந்தினி, செப்., 26ல் உத்தரவிட்டார். அதன்படி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன், என்னிடம் விசாரணை நடத்தவே இல்லை. இதுபற்றி, கலெக்டர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. விசாரணை தொடர் நடவடிக்கையில் உள்ளது என அக்., 14ல், பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த விசாரணையும் நடத்தாத காரணத்தால், மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.