நிதி ஒதுக்கி 6 மாதங்களாகியும் நுாலகம் கட்ட நடவடிக்கை இல்லை
சங்ககிரி:சங்ககிரியில், 40 ஆண்டுகளுக்கு முன் ஊர்புற நுாலகம் தொடங்கப்பட்டு தற்போது முழுநேர கிளை நுாலகமாக செயல்படுகிறது. அங்கு, 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதில் போட்டித்தேர்வுக்கு, 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கிளை நுாலக கட்டடம் சேதம் அடைந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது.தற்போது நுாலகம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படுகிறது. பள்ளி வகுப்பறை கட்டடம் என்பதால் நுாலகத்தில் அமர்ந்து படிக்க இடவசதி இல்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராவோர் மட்டுமின்றி நாளிதழ், மாத இதழ்களை படிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.புது கட்டடம் கட்ட நுாலகத்துறை மூலம் தமிழக அரசு, 1.16 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் ஒரு பகுதியாக, 58 லட்சம் ரூபாயை பொதுப்பணித்துறையிடம் வழங்கி உள்ளது. நிதி பெற்று, 6 மாதங்களுக்கு மேலாகியும், கட்டடம் கட்ட போதிய இடமின்றி, கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளதாக, மாவட்ட நுாலகத்துறையினர் தெரிவித்தனர்.நுாலகத்தை உடனே கட்டக்கோரி, இரு மாதங்களுக்கு முன், சங்ககிரி ஆர்.டி.ஓ.,விடம் சேலம் மேற்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மனு கொடுத்தும் பலனில்லை. தற்போது பெரும்பாலான வாசகர்கள், நுாலகம் செல்வதை தவிர்த்துவிட்டனர். அதனால் நுாலகத்துக்கு உரிய இடத்தை தேர்வு செய்து உடனே கட்ட, அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.