வாடகை காரை கடத்திய பயணி திருச்சியில் மடக்கிய போலீஸ்
தலைவாசல், சென்னையில் இருந்து கோவைக்கு, காரை வாடகைக்கு பேசி வந்தார் பயணி. டிரைவர் தலைவாசல் அருகே, இயற்கை உபாதைக்கு இறங்கினார். அப்போது பயணி, அந்த காரை கடத்திக்கொண்டு, திருச்சி சென்ற போது அங்கு போலீசார், அவரை சுற்றிவளைத்தனர்.வேலுார் மாவட்டம் அணைக்கட்டை சேர்ந்தவர் விஜயகுமார், 46. சென்னையில், கார் வாடகைக்கு ஓட்டுகிறார். இரு நாட்களுக்கு முன் ஒருவர், 'உறவினர் இறந்துவிட்டதால், கோவை வரை செல்ல வேண்டும்' என, வாடகைக்கு காரை பேசினார். உடனே அந்த வாலிபரை ஏற்றிக்கொண்டு, விஜயகுமார், 'ஹூண்டாய்' காரில்புறப்பட்டார். சேலம் மாவட்டம் தலைவாசல், சாமியார் கிணறு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு வந்தனர். அங்கு சாவியுடன் விஜயகுமார் காரை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிக்க சென்றார். திரும்பி வந்தபோது, காரை காணவில்லை. அத்துடன் வாடகைக்கு பேசி வந்தவரே, காரை கடத்திச்சென்றது தெரிந்தது. உடனே விஜயகுமார் புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து சேலம் மாநகர், திருச்சி மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர். பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த கார், ஆத்துாரில் இருந்து முசிறி சாலையில் திருச்சி நோக்கிச்சென்று கொண்டிருப்பது தெரிந்தது. உடனே தலைவாசல் போலீசார், காரை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். அதேநேரம் திருச்சி மாவட்ட போலீசார், உப்பிலியாபுரத்தில் காத்திருந்து, அந்த காரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரில் இருந்தவரை பிடித்து, தலைவாசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவை, சிட்கோவை சேர்ந்த அகமது முஷ்ரப், 25, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், காரை மீட்டனர். தொடர்ந்து அவரை சேலம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.