தீ விபத்தில் கூரை வீடு எரிந்தது; துாங்கிய நிலையில் முதியவர் பலி
நங்கவள்ளி: கூரை வீடு எரிந்து, கட்டிலில் துாங்கிய நிலையிலேயே முதியவர் இறந்தார்.தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் பெரியசாமி, 80. இவருக்கு திருமணமான இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவி காந்திமதியை பிரிந்து, நங்கவள்ளி பெரியசோரகையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். மகள் ஊருக்கு சென்ற நிலையில், பெரியசாமி மட்டும் நேற்று முன்தினம் கூரை வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த, நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். கூரை எரிந்த நிலையில், கட்டிலில் துாங்கிய நிலையிலேயே பெரியசாமி உடல் கருகி இறந்து கிடந்தார். எவ்வாறு தீவிபத்து ஏற்பட்டது என, நங்கவள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.