சேலத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, மெய்யனுார் போக்குவரத்து பணிமனை முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.மண்டல பொதுச்செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் சேகர், அரசு விரைவு போக்குவரத்து சி.ஐ.டி.யு., சங்க மாநில துணை பொதுச்செயலர் முருகேசன் முன்னிலையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக அரசு அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்புக்கொண்டபடி, 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செய்து தர வேண்டும், 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் நாளன்றே, ஓய்வு கால பண பலன்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் அகவிலை படியை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வு பெற்ற தொழிற்சங்க மாநில நிர்வாகி மணிமுடி, சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்ற தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.