ஓமலுார், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, வி.மோட்டூரில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள், தொப்பையாறு அணை நீர்தேக்கத்தில், பரிசல் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.கொங்கரப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு, 50. இவர், 'போதை'யில் நேற்று முன்தினம் தொப்பையாற்றை கடக்க முயன்றபோது தவறி விழுந்தார். நேற்று காலை, அவரது உடல் மீட்கப்பட்டது.இதனால் பாதுகாப்பு கருதி, பரிசல் போக்குவரத்தை நிறுத்த, கோடுஹள்ளி வி.ஏ.ஓ., நேற்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் வி.மோட்டூரில் இருந்து, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், 10 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வி.மோட்டூருக்குள் பஸ் வராமல், பிரதான சாலையில் செல்வதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறி, மாணவர்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு தீவட்டிப்பட்டி - பொம்மிடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.