கணவன் மீதான சந்தேகத்தால் மன உளைச்சல் விபரீத முடிவை நாடிய போலீஸ் ஏட்டு மனைவி
கணவன் மீதான சந்தேகத்தால் மன உளைச்சல்விபரீத முடிவை நாடிய போலீஸ் ஏட்டு மனைவிசேலம், அக். 19-கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, ஏட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தராஜ், 38. இவர் சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். இவரது மனைவி சங்கீதா, 34. இவர்களின் மகன் ரோகித், 7. மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். மகள் தர்ஷிகாஸ்ரீ, 3. எல்.கே.ஜி. படித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் பணி முடிந்து வீட்டுக்கு இரவு, 9:00 மணிக்கு வந்தபோது, இரு குழந்தைகளும் இறந்து கிடந்தன. மனைவி சங்கீதா துாக்கில் சடலமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ், கூச்சலிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். கொண்டலாம்பட்டி போலீசார் மூவரின் உடல்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.துணை கமிஷனர் வேல்முருகன் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குழந்தைகளுக்கு விஷ மாத்திரைகளை கொடுத்து கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று கூட இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வீட்டுக்கு, ஏட்டு கோவிந்தராஜ் தாமதமாக வந்துள்ளார். இதனால் மனைவி சங்கீதாவிற்கு, கணவன் மீது சந்தேகம் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், அதிக கோபம் கொண்ட சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு மருத்துவனையில், மூவரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான ஓமலுாருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்தனர்.