விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பயன்பாட்டுக்கு வந்தும் பயனில்லை
வாழப்பாடி: வாழப்பாடி அரசு மருத்துவமனையில், 3.63 கோடி ரூபாய் செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் நோயாளிகள் பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர், 'எக்ஸ்ரே' அறை உள்ளிட்ட வசதிகளுடன், 3 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு, கடந்த ஜூன், 12ல் திறக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒரு வழியாக, ஒரு வாரத்துக்கு முன், அந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது.ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. குறிப்பாக இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தும் பயனின்றி உள்ளதால், அங்கு முதலுதவி மட்டும் செய்து கொண்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையே தற்போதும் தொடர்கிறது. இதனால் மருத்துவர்களை நியமித்து, அந்த கட்டடத்தை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதுகுறித்து வாழப்பாடி மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ''சிறப்பு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. 'சிடி ஸ்கேன், வென்டிலேட்டர்' உள்ளிட்ட வசதிகள் இல்லை. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.