தமிழக அரசு இயந்திரங்களின் நாற்புற சக்கரங்கள் கழன்றுவிட்டன
கெங்கவல்லி, ''தமிழக அரசு இயந்திரங்களின் நான்கு புற சக்கரங்கள் கழன்ற நிலையில் உள்ளன,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:அஜித்குமார் என்ற இளைஞரை இழுத்துச்சென்று போலீசார் தாக்கியதில், 44 இடங்களில் காயம் ஏற்படுத்தி, அடித்துக்கொலை செய்துள்ளனர். அவரது தம்பிக்கு, தண்ணீர் வராத இடத்தில் பட்டாவும், 80 கி.மீ.,ல், பணி ஆணையை அரசு கொடுத்தபோது, 'இந்த ஆணையும் வேண்டாம்; ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்' என்றுள்ளார். 7 வயது குழந்தை முதல், 80 வயது மூதாட்டி வரை பாலியல் தொல்லைகள், தி.மு.க., ஆட்சியில் தான் அரங்கேறியுள்ளன. தமிழக அரசு இயந்திரங்களின் நாற்புற சக்கரங்கள் கழன்ற நிலையில் உள்ளன.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., வரை, சேலம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்து வருகிறது. இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் தொடங்கியதும், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு, 'ஆன்லைன்' டோக்கன் முறை, அ.தி.மு.க., ஆட்சியில் இருக்காது. 4 ஆண்டுக்கு பின், விடுபட்ட மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் கொடுக்கும்போது, 4 ஆண்டு பழைய பாக்கி, 48,000 ரூபாயை, தி.மு.க.,வினரிடம் கேட்க வேண்டும். 1,000 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு பெண்கள் ஏமாந்துவிட வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான, கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் ஜெயசங்கரன், ஒன்றிய செயலர்கள் ராஜா, ரமேஷ், பேரூர் செயலர் இளவரசு உள்பட பலர் பங்கேற்றனர்.