மேலும் செய்திகள்
கதவணை நீர் வெளியேற்றம் அணை அடிவாரம் வறண்டது
11-May-2025
மேட்டூர்: செக்கானுார் கதவணை நீர் திறப்பால் காவிரி வறண்டதால், கரையோர நீரேற்று நிலையங்களில் எடுக்கும் குடிநீரை நன்றாக சுத்திகரித்து வினியோகிக்க மக்கள் வலியுறுத்தினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரத்தில் இருந்து, 10 கி.மீ.,ல் உள்ள செக்கானுார் கதவணை நிலையத்தில், மின் உற்பத்திக்கு, 0.45 டி.எம்.சி., நீர் காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த நீர், பராமரிப்பு பணிக்கு கடந்த, 9ல், கீழ் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. இரு நாட்களாக மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானுார் வரை காவிரியாறு வறண்டு காட்சியளிக்கிறது.மேட்டூர் அணை அடிவாரம், காவிரி கரையோரம் மேட்டூர் நகராட்சி, கொளத்துார் ஒன்றியம், டவுன் பஞ்சாயத்துக்கு குடிநீர் எடுக்கும் நீரேற்று நிலையம் உள்ளது. தொட்டில்பட்டியில் காவிரி கரையோரம் சேலம், வேலுார் குடிநீர் திட்டம், பி.என்.பட்டி, வீரக்கல்புதுார், காடையாம்பட்டி, நங்கவள்ளி குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்கள் உள்ளன.குடிநீருக்கு அணையில் இருந்து வெளியேற்றும், 1,000 கனஅடி நீர், காவிரியில் கால்வாய் போல் செல்கிறது. அசுத்தமாக காணப்படும் அந்த நீரை, நீரேற்று நிலையங்களில் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்க வேண்டியுள்ளது. 15 நாட்கள் செக்கானுார் கதவணையில் பராமரிப்பு பணி முடியும் வரை இதே நிலை நீடிக்கும். அதுவரை மாசடைந்த நீர், நீரேற்று நிலையங்களுக்கு செல்வதால், அந்த நீரை துர்நாற்றம் வீசாதபடி நன்றாக சுத்திகரித்து வினியோகிக்க, மக்கள் வலியுறுத்தினர்.
11-May-2025