காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றியது மணல் வளத்தை பாதுகாக்க வேண்டும்
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால், ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில், தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் காலியானதால், மணல் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளியில், ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி, 2011 முதல் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 10 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கும். கடந்த ஏழு மாதங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட மணல், ஓடப்பள்ளி நீர் தேக்கம் பகுதியில் பரவலாக படர்ந்து மணல் திட்டாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக, ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் தடுப்பணை பராமரிப்பு பணிக்கு, நீர்தேக்கத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டது. எனவே, நீர்தேக்கம் பகுதியில் மணல் திட்டுகள் வெளியே தெரிகிறது. சிலர் இரவு நேரத்தில், மணலை மூட்டைகளாக கட்டி, கரைக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, வருவாய்துறை அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தற்போது, தடுப்பணை நீர்தேக்கத்தில் தண்ணீர் இல்லாததால், மணல் திருட்டு நடக்க அதிகளவு வாய்ப்புள்ளது. மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.