அங்கன்வாடி ஊழியருக்கு பணி ஓய்வு கால பணிக்கொடை கோரி மாநாடு சங்க மாநில செயலாளர் தகவல்
சிவகங்கை: அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தி மார்ச் 21 ல் சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் ஐ.பாக்கியமேரி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 1993 ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.அங்கன்வாடி மையத்தில் இணை உணவு பெறும் கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்களை 'போஸான் டிராக்கரில்' முகம், கண்புருவத்தை படம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும். மினி மையத்தில் இருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு பெற்று சென்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள ஊழியர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பணி ஓய்வு காலத்தில் பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 4) மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்தப்படும். மார்ச் 21 ல் சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என்றார்.