பறவைகள் சரணாலயத்தில் இன்று 4000 பனை விதை நடவு
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கண்மாய்கரைகளில் இன்று 4000 பனை விதைகள் மாணவர்களால் விதைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் 6 கோடி பனை மர விதைகள் நட அரசு திட்டமிட்டுள்ளது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் 20 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் துவக்கமாக வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுக்குடிப்பட்டி,சின்னக் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய்கள்,வேட்டங்குடி கண்மாய்களில் பனை விதைகளை விதைக்க உள்ளனர். கலெக்டர் பொற்கொடி துவக்கி வைக்கிறார். இன்று சுமார் 200 மாணவர்கள் தலா 20 பனை விதைகள் வீதம் 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய உள்ளனர். இத்திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் இணைந்து செய்கின்றனர்.