எஸ்.புதுார் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை * அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானமாக 50 பவுன் போலி நகைகளை வைத்து ரூ.18.67 லட்சம் பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் இணை பதிவாளர் தலைமையில் கூட்டுறவு அதிகாரிகள், சங்க லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 13 பாக்கெட்களில் இருந்த 50 பவுன் (400 கிராம்) நகைகள் போலி என தெரியவந்தது. இப்போலி நகைகளை அடமானமாக வைத்து ரூ.18.67 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளித்தனர். தொடர் விசாரணை நடத்த உத்தரவிட்டதை அடுத்து இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.* 126 சங்கத்தில் விசாரணை தேவை:மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களில் 10 ஆண்டுக்கும் மேலாக ஒரே சங்கத்தில் செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது போன்ற காரணத்தால் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை லாக்கரில் வைத்து, பல லட்சம் வரை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட அளவில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் உள்ள நகைகளை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.* அமைச்சர் ஊரிலே மோசடியா:குறிப்பாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் இது போன்ற மோசடி நடப்பதா என மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அரசு, தமிழக அளவில் உள்ள கூட்டுறவு வங்கி லாக்கரில் உள்ள நகைகளை பரிசோதனை செய்து, போலி நகையை லாக்கரில் இருந்து அகற்றுவதோடு, அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.///பாக்ஸ் மேட்டர்:லாக்கரில் போலி நகை யார் பொறுப்பு:* கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அடமானமாக வரும் நகைகளை, நகைமதிப்பீட்டாளர் பரிசோதனை செய்து, எவ்வளவு கிராமுக்கு, எவ்வளவு தொகை என குறிப்பிட்டு நகையை பாக்கெட்டில் போட்டு, செயலரிடம் கொடுத்து விடுவார். லாக்கரை திறக்க கூட்டுறவு சங்க செயலர், கேஷியர் இருவரிடம் மட்டுமே சாவிகள் இருக்கும். அவர்கள் இருவரும் தான் லாக்கரை திறந்து அடமானமாக வந்த நகைகளை வைக்க வேண்டும். எனவே இம்மூன்று பேருக்கு தெரியாமல் போலி நகை லாக்கருக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.