உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில்  60 டன் தக்கை பூண்டு விதை வழங்கல்

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில்  60 டன் தக்கை பூண்டு விதை வழங்கல்

சிவகங்கை: மாவட்ட அளவில் 60 டன் தக்கை பூண்டு விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் சண்முகஜெயந்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 60 டன் தக்கை பூண்டு விதை நடவு செய்ய 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். தக்கை பூண்டு விதைத்து அதை மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் அமைப்பு மேம்படும். மண்ணில் நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கும். களர் நிலங்களில் தக்கை பூண்டு விதைப்பு செய்வதால், நில சீர்திருத்தம் செய்யலாம். மண்ணில் அங்கக கார்பன் அளவு அதிகரிக்கிறது. இதில் உள்ள வேர் முடிச்சு தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. தற்போது அனைத்து வேளாண் விரிவாக்க மையத்தில் தக்கை பூண்டு விதை இருப்பில் உள்ளது.ஏக்கருக்கு 20 கிலோ வீதம் வழங்கப்படும். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்படும். 50 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.1250 மானியம் வழங்கப்படும். விதைப்பு செய்த 40 முதல் 45 வது நாளில் பூப்பதற்கு முன்பு மடக்கி உழவு செய்ய வேண்டும். 3000 ஏக்கரில் விதைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்களை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ