தெரு நாய்கள் கடித்து 6.41 லட்சம் பேர் பாதிப்பு * இரண்டாவது இடத்தில் தமிழகம்
சிவகங்கை:தமிழகத்தில் தெரு நாய்கள் கடந்தாண்டு 6.41 லட்சம் பேரை கடித்ததால் அதிகளவில் நாய் கடிக்கு ஆளாகும் மாநில பட்டியலில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் நாய்கள் அதிகளவில் வளர்கின்றன. வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கே முறையாக தடுப்பூசி போட வேண்டும். உரிய சோப்பால் குளிக்க வைத்து முறையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிடில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கூட வெறிநாயாக மாற வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளது.2022 ல் மாநிலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 264 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதே போன்று 2023 ல் இந்த எண்ணிக்கை 4.41 லட்சமாக அதிகரித்தது. கடந்தாண்டு (2024) நாய் கடிக்கு ஆளானோர் எண்ணிக்கை 6.41 லட்சமாக அதிகரித்தது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் நாய் கடித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன. இவற்றில் 23 சதவீத நாய்கள் மட்டுமே முறையாக கருத்தடை செய்யப்பட்டுள்ளன. மற்ற 73 சதவீத நாய்கள் கருத்தடையே செய்யாமல், ரோட்டில் திரிவதாக புகார் எழுந்துள்ளது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த, ‛நாய் இல்லா தெருக்கள்' என்ற திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நாய்கள் பாதுகாப்பு கூடாரம் அமைத்து பராமரிக்க வேண்டும். கூடாரத்தில் அடைத்து வைத்துள்ள நாய்களுக்கு கருத்தடை செய்தும் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி பராமரிக்க அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.முதல்வருக்கு எம்.பி., கடிதம்:தமிழகத்தில் ‛நாய்கள் இல்லாத தெருக்களை' உருவாக்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.