தேவஸ்தான இடத்தை காட்டி ரூ.29 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்திமாலா 41. விஜயகுமாரிடம் குருந்தம்பட்டுவைச் சேர்ந்த ராஜேந்திரன், காரைக்குடியைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் மற்றும் சித்ராதேவி, மேலுாரைச் சேர்ந்த பாலா ஆகியோர், காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை விலைக்கு தருவதாக பேசினர்.ஜார்ஜ் மைக்கேலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி விஜயகுமாரிடம் ரூ. 25 லட்சம் பெற்றதுடன் பத்திரச்செலவுக்கு ரூ.3.50 லட்சமும் பெற்றனர். இதற்கு ராஜேந்திரன் கமிஷன் தொகையாக ரூ.1.50 லட்சம் பெற்றார். பணத்தைப் பெற்று கொண்டு பட்டா மாறுதல் செய்யாமல் இழுத்தடிப்பு செய்ததால் விஜயகுமார் சர்வேயரிடம் விவரம் கேட்டார்.அப்போதுதான் அது தேவஸ்தான இடம் என தெரிய வந்தது. இதனால் கொடுத்த பணத்தை விஜயகுமார் திரும்ப கேட்டார். பணத்தை கொடுக்க மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.இதுதொடர்பாக ஆனந்திமாலா கொடுத்த புகாரின்படி ராஜேந்திரன், ஜார்ஜ் மைக்கேல், சித்ராதேவி, பாலா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.