விதை சேமிப்பு கிடங்கில் மழைநீர் தவிக்கும் வேளாண் அலுவலர்கள்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் உள்ள ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழமையான கட்டடத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்படுகிறது. இக்கட்டடம் பழுதடைந்து மழை நீர் ஒழுகுவதால் ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான வேறு கட்டடத்தில் வேளாண் அலுவலகம் தற்காலிகமாக செயல்படுகிறது. அங்கும் இடவசதி பற்றாக்குறையால் ஆவணங்கள், விதை, உரம் உள்ளிட்டவை பழைய கட்டடத்திலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கும் சில அலுவலர்கள் அமர்ந்து பணியாற்றுகின்றனர். ஆக. 5ல் பெய்த மழை காரணமாக பழைய கட்டடத்திற்குள் செயல்பட்ட விதை சேமிப்பு கிடங்கு, ஆவண வைப்பறைக்குள் மழை நீர் புகுந்தது. காலையில் வந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து மழைநீரை வெளியேற்றினர். உரம், விதை நனையாமல் தப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தாலும், பெரிய மழை பெய்யும் போது நனைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும். எனவே வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்துக்கு விரைந்து இடம் ஒதுக்கி புதிய கட்டடம் கட்ட ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.