மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
சிவகங்கை: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு 2025 ஜன.25 ல் நடைபெறவுள்ளது.மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024--25ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10 ஆயிரம் ஒரு மாதத்திற்கு ஆயிரம் வீதம் வழங்கப்படும். தமிழக அரசின் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்படும்.முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும். இரண்டாம் தாள் மதியம் 2:00 மணி முதல் 4:00 வரையிலும் நடைபெறும். மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து டிச.9க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தெரிவித்துள்ளார்.