உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஐயப்ப பக்தர்கள் வருகை எதிரொலி சைவத்திற்கு மாறிய பேக்கரிகள்

ஐயப்ப பக்தர்கள் வருகை எதிரொலி சைவத்திற்கு மாறிய பேக்கரிகள்

திருப்புவனம்: தமிழகத்தில் ஐயப்ப சீசன் தொடங்கியதை அடுத்து விரதமிருக்கும் பக்தர்களின் வசதிக்காக முட்டை சேர்க்காத கேக் வகைகளை பேக்கரிகளில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.கார்த்திகை தொடங்கிய நிலையில் ஐயப்பன், பழநி மலை முருகன் கோயில்களுக்கு பலரும் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள், 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த நாட்களில் அசைவம் எதுவும் உணவில் சேர்ப்பது இல்லை. பெரும்பாலான பக்தர்கள் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் மாலை ஆறு மணிக்கு குளித்து பூஜை செய்த பின் உணவு அருந்துவார்கள், ஒரு சில பக்தர்கள் பேக்கரிகளில் கேக் வகைகளை சாப்பிடுவது வழக்கம். பேக்கரிகளில் கேக் தயாரிப்பின் போது அதில் முட்டை சேர்ப்பது வழக்கம். கேக் வகைகளையும் ஐயப்ப பக்தர்கள் தவிர்த்து வருகின்றனர்.ஐயப்ப பக்தர்களை கவரும் பொருட்டு பேக்கரிகளிலும் முட்டை சேர்க்காத கேக் வகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்புவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் உள்ளன.நான்கு வழிச்சாலையை ஒட்டியும், நகர்ப்புறங்களிலும் பேக்கரிகள் செயல்பட்டு வருகின்றன. ஐயப்ப பக்தர்கள் பலரும் ராமேஸ்வரம் சென்று வருவது வழக்கம், நான்கு வழிச்சாலையில் உள்ள பேக்கரிகளில் டீ, காபி, கேக் வகைகளுக்காக வாகனங்களை நிறுத்துவார்கள், அவர்களை கவர்வதற்காக பேக்கரிகளில் முட்டை சேர்க்காத கேக் வகைகளை தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர் வெங்கடேஷ்வரன் கூறுகையில் : ஐயப்ப பக்தர்கள் பலரும் முட்டை சேர்த்து தயாரிப்பதால் கேக் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். அவர்களின் வசதிக்காக முட்டை சேர்க்காத கேக் தயாரித்து விற்பனை செய்கிறோம்.பெண்கள் சிறு குழந்தைகளுக்கு முட்டை சேர்க்காத கேக் கேட்கின்றனர். அவர்களுக்காகவும் முட்டை சேர்க்காத கேக் தயாரித்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !